பூட்டானில் நிலநடுக்கம்-3 இந்தியர் உட்பட 10 பேர் பலி
திம்பு: பூட்டானில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தில் மூன்று இந்திய தொழிலாளர்கள் உட்ப்ட 10 பேர் பலியானார்கள்.
மதியம் சுமார் 2.53 மணிக்கு ஏற்பட்ட இந்த திடீர் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதையடுத்து மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த பூகம்பம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகியிருந்தது.
தலைநகர் திம்புவுக்கு கிழக்கே உள்ள நரங் கியாக், மோங்கர், யாங்னீர் உள்ளிட்ட பகுதியில் கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கி 7 பேர் பலியானார்கள்.
சம்த்ரூப்ஜோங்கர் பகுதியில் மூன்று இந்திய தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
மீண்டும் ஒரு நிலநடுக்கம்...
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 1.08 மணிக்கு இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மியான்மரில் மையமிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை அசாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் மக்கள் உணர்ந்ததாக தெரிகிறது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு சில மணி நேரங்கள் கூட ஆகாத நிலையில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இயற்கை சீற்றம் மேலாண்மை பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எதுவும் உடனடியாக அறியப்படவில்லை. ஆனால், மக்கள் பாதி தூக்கத்தில் அலறியடித்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினர். பயத்தில் அவர்களுக்கு தெருக்களிலே உறங்கினர் என்றார்.