சாந்தி பூஷனுக்கு தலித், பிசி என்றால் ஆகாது-தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம்
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த பி.டி. தினகரன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்றும் இந்திய வழக்கறிஞர் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சாந்திபூஷண், பாலி நாரிமன், அசோக் தேசாய், ராம் ஜேட்மலானி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அதில் சாந்தி பூஷண் ஒருபடி மேலேயே போய் தன்னைப் போலவே தினகரனும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு 'சாப்ட் கார்னர்' உள்ளதாகவும் அதனால் தான் அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க முயல்வதாகவும் பேசி, நீதித்துறையில் ஜாதியைத் திணிக்கும் வேலையைக் காட்டியுள்ளார்.
இதற்கு தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் செயற்குழு கூட்டம் அதன் தலைவரான சென்னை மாவட்ட நீதிபதி பி.ராமலிங்கம் தலைமையில் நடந்தது. இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
நீதித்துறையில் மிக உயர்ந்த மதிப்புமிக்க பதவியான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உள்நோக்கம் கற்பித்தும், ஜாதி அடிப்படையில் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்வதாகவும் மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கக்தக்கது.
பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் தென்னிந்திய நீதிபதிகள் மீது அவர் தனிப்பட்ட வெறுப்பு கொண்டிருப்பதையே சாந்தி பூஷனின் பேச்சு பிரதிபலிக்கிறது. அவர் தனது கருத்து உடனே திரும்பப் பெற வேண்டும்.
நீதிபதி பி.டி.தினகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியபோதும், தற்போது கர்நாடக மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஓராண்டுக்கும் மேல் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதும் ஒன்றுமே சொல்லாமல் இருந்துவிட்டு,
இப்போது உச்ச நீதிமன்றத்துக்கு பதவி உயர்வு பெறும் நேரத்தில், கால நேரம் பார்த்து, அவர் அந்தப் பதவிக்கு வருவதை கெடுக்கும் வகையில் குற்றச்சாட்டு வைப்பது உள்நோக்கம் கொண்டது.
அவர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவதை தடுக்கவும், தங்களுக்கு வேண்டியவர்களை மனதில் கொண்டும் செயல்படுவதுபோல் தெரிகிறது.
உண்மையான புகார் என்றால் அதை ஏன் முன்பே தெரிவிக்கவில்லை?. இது அவர்களின் உள்நோக்கத்தையும், கெட்ட எண்ணத்தையும் வெளிப்படுத்துவதுடன் அவர்களின் நம்பகத்தன்மை மீதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பொதுவாக, பி.டி.தினகரன் உள்பட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றிய நீதிபதிகள் அனைவருமே மாவட்ட நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டுகளிடம் கருணையும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும் அதிக அக்கறையும் கொண்டவர்கள்.
அதே நேரத்தில் நீதித்துறையின் கண்ணியம் காக்க நீதித்துறை நிர்வாகத்தில் மிக உயர்ந்த கண்டிப்புடனும் நடந்து கொண்டவர்கள்.
நீதிபதிகளை நியமிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் குழு மிக உயர்ந்த அமைப்பாகும். இதில் ஒரு சில வழக்கறிஞர்கள் ஏதோ தாங்கள் மட்டுமே தமிழ்நாடு வக்கீல்களின் ஏகபிரதிநிதிகள் போல் நீதிபதிகள் நியமனத்தில் தலையிடுவது கண்டிக்கத்தக்கது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தினகரன் தலித் என்பதால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அவரை குறி வைப்பதாகக் கருதப்படும் நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தினகரன் மிக வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும், பரம்பரையாகவே அவருக்கு ஏராளமான நிலங்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய தி.க. தலைவர் வீரமணி, தினகரன் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் சிலர் அவரது வளர்ச்சியை தடுக்க பார்க்கின்றனர்.
பொய் புகார்களை அள்ளிவிடும் சாந்தி பூஷன் போன்ற சக்திகளை கண்டித்து வரும் 25ம் தேதி சென்னையிலும், மதுரையிலும் திராவிடர் கழகம் மற்றும் சமூக நீதி ஆதரவாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
போராட்டம் நிறுத்தி வைப்பு:
இந் நிலையில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடக மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்வதைத் தடுக்கும் பார்ப்பன சக்திகளை எதிர்த்தும், பி.டி.தினகரன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படுவது உறுதியாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னையிலும், மதுரையிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.