ராகுல் வந்தும் பயனில்லை-காங்.கில் சேர ஆளில்லை
இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்கு தேர்தல் நடத்த ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். அதற்காக பல்வேறு மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையை மத்திய இணையமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த கடந்த 8, 9, 10 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் பொதுச் செயலாளராக உள்ள ராகுல் காந்தி சுற்றுப் பயணம் செய்தார்.
கல்லூரி மாணவ, மாணவிகள், மீனவர்கள், இளைஞர்கள் என்று பல்வேறு பிரிவினரை அவர் சந்தித்து உரையாடினார். தான் சுற்றுப் பயணம் செய்துவிட்டால் இளைஞர்கள் காங்கிரஸை நோக்கி படையெடுத்துவிடுவார்கள் என்று கணக்கு போட்டார்.
ஆனால், அப்படி ஏதும் நடக்கவி்ல்லை. இதனால் உறுப்பினர் சேர்க்கைக்கான கடைசி தேதியை செப்டம்பர் 17ல் இருந்து 24 வரை நீட்டித்துள்ளனர்.
மேலும் உறுப்பினர் சேர்க்கை மந்தமாக இருப்பது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை ராகுல் காந்தி வறுத்து எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினர். ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு இளைஞர்கள் காங்கிரஸில் சேரவில்லை.
தமிழகத்தில் காங்கிரசில் சேரும் முன்பே எந்த கோஷ்டியில் சேர வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய நிலையில் தான் கட்சி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ராகுல் சுற்றுப் பயணம் அல்ல, தமிழகத்திலேயே வந்து மாதக் கணக்கில் தங்கினாலும் இளைஞர்களை காங்கிரஸை நோக்கி இழுப்பது அவ்வளவு எளிதல்ல.
உறுப்பினர் சேர்க்கையே மந்தமாக இருக்கும் நிலையில் காங்கிரஸ் பாரம்பரியப்படி, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிக்க போட்டா போட்டி ஆரம்பித்துவிட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் ஈவேரா திருமகன், ராஜ்யசபா எம்பி சுதர்சன நாச்சியப்பனின் மகன் ஜெயசிம்மன் உள்பட பலரும் இந்தப் பதவிக்கு குறி வைத்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அதே போல தனது மகனுக்கு இளைஞர் காங்கிரஸில் முக்கிய பதவியை பெற தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
அதே போல தங்களைத் தேடி வந்த நடிகர் விஜய்யை ராகுல் சரியாக பயன்படுத்தாததும் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை மந்தத்துக்கு ஒரு காரணம் என்கிறார்கள். விஜய் இளைஞர் அல்ல... அவருக்கு இளைஞர் காங்கிரசி்ல் இடமில்லை என்று கூறி அவரையும் அவரது ரசிகர் பட்டாளத்தையும் அப்செட் ஆக்கினார் ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.