பிரமோற்சவம்-திருப்பதியில் ரூ.1.44 கோடி வசூல்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவ திருவிழாவை அடுத்து நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ. 1.44 கோடி வசூலாகியுள்ளது.
இந்த பிரமோற்சவ விழா கடந்த 21ம் தேதி துவங்கியது.
நேற்று தங்க கொடி மரத்தில் கொடியேற்றும் விழா நடந்தது. இதில் ஆந்திர முதல்வர் ரோசய்யா, பிரஜ்ஜா ராஜ்ய கட்சி தலைவர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழா மாலை சுமார் 6.15 மணிக்கு நடந்தது.
அதன் பின்னர் இரண்டாம் நாள் 4 மாட வீதி உலா நடந்தது. இதில் ஏழுமலையான் அன்ன வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவினை அடுத்து திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் வெள்ளமான கரைபுரண்டது.
பக்தர்கள் சுமார் 2 கிமீ தூரத்துக்கு வரிசையில் நின்று பெருமானை தரிசித்தனர்.
அப்போது ஊர்வலத்துக்கு முன்னதாக கலைஞர்கள் உற்சாக நடனமாடினர். இதில் தமிழக கலைஞர்களின் கிருஷ்ணர் வேடம், கேரளாவின் சென்டை மேளம், மகாராஷ்டிராவின் பண்டரி பஜனை, கர்நாடக கலைநிகழ்ச்சிகள் என விழா அமர்க்களப்பட்டது.
மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் உண்டியலில் ரூ. 1 கோடியே 44 லட்சத்து 24 ஆயிரம் வசூலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது கண்ணை கவரும் மலர்க்கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.