ஹெலிகாப்டரைத் தவிர்க்கும் எதியூரப்பா!
ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் ஹெலிகாப்டர்கள் என்றாலே தலைவர்களுக்கு அலர்ஜியாகி விட்டது.
இந்த நிலையில் அதிக அளவில் ஹெலிகாப்டர் பயணங்களை மேற்கொள்பவரான கர்நாடக முதல்வர் எதியூரப்பா இப்போது ஹெலிகாப்டர்களைத் தவிர்க்க ஆரம்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது உறவினர்கள், குடும்ப நண்பர்கள் அனைவரும் என்னிடம் ஹெலிகாப்டரில் செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறி வருகிறார்கள். அதை ஏற்று நான் ஹெலிகாப்டரில் செல்வதை தவிர்த்து வருகிறேன். பெரும்பாலும் நான் ரயிலில் பயணம் செய்வதையே விரும்புகிறேன் என்கிறார்.
சமீபத்தில் லாலு பிரசாத் யாதவ் கூட இரவில் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து விட்டு காரில் பயணம் செய்தார் என்பது நினைவிருக்கலாம். மேலும், ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது பைலட்டுகள் சொல்வதை கேட்க வேண்டும் என்றும் அவர் சமர்த்தாக பேசினார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது தனது இஷ்டத்திற்கு கண்ட கண்ட இடங்களில் ஹெலிகாப்டரை இறக்கி 'அழிச்சாட்டியம்' செய்தவர் லாலு என்பது மறந்திருக்காது.