கருணாநிதியின் 'அடக்கம்'-ஜெயலலிதா கண்டனம்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி கடந்த மாதம் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து மீண்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித் தொழிலை செய்ய ஆரம்பித்தனர்.
ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். 16ம் தேதி ராமேஸ்வரம் பகுதியில் 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து, வலைகளை அறுத்து, அவர்களுடைய படகுகளை சேதப்படுத்தி மீன்பிடி சாதனங்களை கடலில் தூக்கி எறிந்ததோடு மட்டுமல்லாமல் 5 படகுகளையும் 21 மீனவர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்களை ஈவு இரக்க மின்றி துன்புறுத்துவது, துப்பாக்கியால் சுடுவது, சிறை பிடிப்பது ஆகியவற்றை இலங்கை அரசு வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறது. இது போன்ற துயரச் சம்பவம் நடைபெறும் ஒவ்வொரு முறையும் இலங்கை அரசைக் கண்டித்து அறிக்கை விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் கருணாநிதி.
21 தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறைபிடித்தது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள கருணாநிதி, இது போன்ற வன்முறை நிகழ்வுகளுக்கு ஒரு முடிவு ஏற்படும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அடக்கத்துடன் கூறியிருக்கிறார் கருணாநிதி.
இந்தச் துயரச் சம்பவத்தை அடுத்து மீண்டும் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு வாரத்திற்கு மேலாகியும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை.
மத்திய அரசை பொறுத்தவரையில், தமிழக மீனவர்களின் பிரச்சனையை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இந்த நிலைமை நீடிக்குமேயானால் மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக்கப்படும்.
மத்திய அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காமல், பெயரளவில் இலங்கை அரசு கண்டித்து அறிக்கை விடுவதும், மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேட்டி அளிப்பதும் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர உதவாது. கருணாநிதியின் இது போன்ற மென்மையான அணுகுமுறைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மீனவர்களை வாழவிடாமல் தொடர்ந்து துன்புறுத்திக்கொண்டு இருக்கும் இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க மத்திய அரசு மூலமாக திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிமுக ராமநாதபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் 25ம் தேதி ராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.