கிழக்கு கடற்கரைச் சாலையில் வாலிபர் படுகொலை
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், முட்டுக்காடு அருகே வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முட்டுக்காட்டுக்கு அருகே வஸ்தகரா தோட்ட பகுதி இருக்கிறது. அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் பிணமாக கிடப்பதை அந்த வழியாக சென்றவர் ஒருவர் பார்த்தார்.
அந்த பிணத்தின் உடலில் கழுத்து, வயிறு, முதுகு என பல இடங்களில் சராமரியாக கத்தியால் குத்தி கிழிக்கப்பட்டிருந்தது. இறந்த அந்த இளைஞருக்கு சுமார் 25 முதல் 30 வயதுக்குள் இருக்கலாம் என தெரிகிறது.
இதையடுத்து அந்த நபர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் உடனடியாக விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவ இடத்தில் கொலை செய்யப்பட்டதற்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவரை வேறு எங்காவது வைத்து கொலை செய்து இங்கு போட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவி்த்தனர்.
இறந்த அந்த வாலிபர் யார்? அவரை எதற்காக கொன்றனர்? போன்ற கேள்விகளுக்கு போலீசார் விடை தேடி வருகின்றனர்.