போலீஸிடம் சிக்கிய பெண் விடுதலைப் புலி சயனைடு சாப்பிட்டு மரணம்
வவுனியா: போலீஸாரிடம் சிக்கிய விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த பெண் வீராங்கனை சயனைடை சாப்பிட்டு உயிர் நீத்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்த பின்னர் அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் சயனைடு சாப்பிட்டு உயிர் துறந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
வவுனியாவில் உள்ள உக்குளம்குளம் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில், இரு பெண் விடுதலைப் புலிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு விரைந்து அவர்கள் இருவரையும் கைது செய்து பிடித்துச் சென்றனர்.
அவர்கள் இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் துப்பாக்கிப் பிரிவான நெருப்பு என்ற பிரிவைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் ஆவர்.
வவுனியாவில் வைத்து அவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது ஒரு பெண் விடுதலைப் புலி மறைத்து வைத்திருந்த சயனைடு குப்பியை எடுத்து வாயில் போட்டு விட்டார்.
இதையடுத்து சில நிமிடங்களில் அந்த வீராங்கனை உயிர் துறந்தார்.
பிடிபட்ட இன்னொரு பெண் விடுதலைப் புலி கொடுத்த தகவலின் பேரில், அவர்களது மறைவிடத்திலிருந்து 3 தற்கொலைப் படை உடைகள், 6 கிலோ அதிக சக்திவாய்ந்த வெடிபொருட்கள், 10 டெட்டனேட்டர்களை கைப்பற்றியதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.