ஓசோன் படல ஓட்டை சுருங்கி வருகிறது!
மெல்போர்ன்: ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை சுருங்கி வருவதாகவும், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அது முற்றிலும் மறைந்து போய் விடும் எனவும், இதனால் கிழக்கு ஆஸ்திரேலியாவில் வறட்சி நிலை மாறி அங்கு நல்ல மழைப் பொழிவு கிடைக்கும் எனவும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஓசோன் படல ஓட்டை காரணமாக உலக சுற்றுச்சூழல் பல்வேறு அபாயங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், ஓசோன் படல ஓட்டை சுருங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மெல்போரன் வானிலை ஆய்வு மைய தலைவர் மாத்யூ துலி கூறுகையில், புவி வெப்பமாதலுக்கு எதிரான பல்வேறு காப்பு நடவடிக்கைளை பல்வேறு நாடுகளும் எடுக்குத் தொடங்கி விட்டன. சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும் உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஓசோன் படல ஓட்டை சுருங்கத் தொடங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையை மேலும் சிறப்பாக்கி தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், புவி வெப்பத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக்கினால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஓசோன் படல ஓட்டை முற்றிலும் மறைந்து விடும்.
இதன் காரணமாக கிழக்கு ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் நிரந்தர வறட்சி மறைந்து அங்கு நல்ல மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளது என்றார் அவர்.