'திருவிழா'-முதுகுளத்தூரில் 2 கோவில்களுக்கு பூட்டு!
ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே மாரந்தையில் திருவிழா ஏற்பாடு செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அப்பகுதியில் உள்ள இரண்டு கோவில்களுக்கு வருவாய் துறை பூட்டு போட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்து மாரந்தை அருகில் அரியநாச்சியம்மன் மற்றும் ஆதிவராக பெருமாள் கோயில் உள்ளது. இந்த இரண்டு கோவில்களிலும் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் கடந்த 22 முதல் வரும் 30ம் தேதி வரை திருவிழா நடத்த இளஞ்செம்பூர் போலீஸில் அனுமதி கோரினர். அதே தேதியில் மற்றொரு பிரிவினரும் போலீசாரிடம் அனுமதி கேட்டனர்.
இதையடுத்து கடலாடி தாலுகா அலுவலகத்தில் பரமக்குடி ஆர்டிஓ ஞானக் கண்ணன் தலைமையில், ராமநாதபுரம் ஏடிஎஸ்பி சூர்ய பிரகாசம் முன்னிலையில் சமரச கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே உடன்பாடு ஏற்படாததால் திருவிழா நடத்த அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மேலும் பிரச்னைக்குரிய மாரந்தையில் உள்ள இரண்டு கோவில்களுக்கும் வருவாய் துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர்.