முட்டுக்காடு கொலை:7 பேர் கைது-ஒருவருக்கு வலைவீச்சு
சென்னை: சென்னை முட்டுக்காடு கிழக்குக் கடற்கரைச் சாலையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 7 பேரை கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.
முட்டுக்காடு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 22ம் தேதி வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். கழுத்து, வயிறு, முகம் உள்ளிட்ட பாகங்களில் கத்தியால் குத்தி அவர் கொல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து விசாரணையை துவக்கிய போலீஸார் இறந்த வாலிபரின் பெயர் சலீம் (27) என்றும், அவரது வீடு பூந்தமல்லி, கரையான்சாவடியில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அவரது குடும்பத்தினரும் உறுதி செய்தனர்.
மேலும் விசாரணையில்,
சலீம், ஜாம்பஜார் பகுதியை சேர்ந்த தாவூத் பாட்ஷா (30) என்பவருடன் சேர்ந்த பல திருட்டு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இருவருக்கும் இடையில் லேசான மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதையும் கண்டுபிடித்தனர்.
சமீபத்தில் சலீம் தனது பெற்றோர் பேச்சை கேட்டு திருந்தி வாழும் நோக்த்தில் மும்பை சென்று, ஸ்கூட்டர் மெக்கானிக்காக வேலை பார்த்துள்ளார். அவர் தங்கியிருந்த பகுதியில் பன்றி காய்ச்சல் பரவிய நிலையில் பயந்து சமீபத்தில் தான் சென்னைக்கு திரும்பியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீஸார் தாவூத் பாட்ஷாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தனது கூட்டாளிகள் 7 பேருடன் சேர்ந்து சலீமை தீர்த்துகட்டியதாக தெரிவித்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில்,
அவர் இங்கு வந்ததை அடுத்து என்னை குறித்த ரகசியங்களை போலீஸாரிடம் வெளியிட்டுவிடுவார் என பயந்தேன். இதையடு்தது அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
இந்த திட்டத்துக்கு எனது எனது உறவினர் இம்ரான் மற்றும் நண்பர்கள் ரசூல் பாட்ஷா, முனைவர் பாட்ஷா, லியாகத் உசேன், ஜான் பாட்ஷா, சபீத், ஆட்டோ டிரைவர் ஞான இருதயராஜ் ஆகியோர் துணையுடன் கொன்றேன்.
ரம்ஜான் தொழுகைக்கு முட்டுக்காடு அருகே இருக்கும் தர்காவிற்கு செல்லலாம் என கூறி அவரை வரவழைத்தேன். போகும் வழியில் தயாராக நின்றிருந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை தீர்த்து கட்டினோம். பின்னர் கடலில் குளித்துவிட்டு எதுவும் தெரியாதது போல் வந்துவிட்டோம் என்றார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரது நண்பர்கள் 6 பேரை கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு நண்பரை தேடி வருகின்றனர்.