ராமதாஸ்-பொன்முடி கொடும்பாவிகள் எரிப்பு!
விழுப்புரம்: வன்னியர் சங்கம் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்களின் நினைவிடத்தில் அமைச்சர் பொன்முடி அஞ்சலி செலுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மையை பாமகவினர் எரித்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினர் ராமதாஸின் கொடும்பாவியை எரித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் இடஒதுக்கீடு கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் பலர் இறந்தனர். அவர்களுக்கு அங்கு வன்னியர் சங்கம் சார்பில் நினைவுத் தூண் மைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வன்னியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் இங்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக எம்எல்ஏக்கள் இருவர் உட்பட 103 பேர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் பாமக மாவட்ட செயலாளர் அன்பு தலைமையில், நிர்வாகிகள் பலர் கோலியனூரில் உள்ள நினைவிடத்திற்கு நேற்று காலை அஞ்சலி செலுத்தினர். அப்போது சிலர் அமைச்சர் பொன்முடியின் உருவ பொம்மை எரித்தனர்.
இதனை அறிந்த கோலியனூர் திமுகவினர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உருவ பொம்மையை பதிலுக்கு எரித்தனர்.
உருவபொம்மை எரிப்பதில் ஈடுபட்ட பாமக, திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.