அந்தமானில் ஆயுதங்களுடன் சிக்கிய மர்ம படகு
போர்ட் பிளேர்: அந்தமான் தெரிசா தீவில் 2 ராக்கெட் குண்டுகள் மற்றும் ஏகே 47 துப்பாக்கி தோட்டாக்கள் 12 உடன் நின்ற மர்ம படகை போலீஸார் கைப்பற்றினர்.
இந்த சம்பவரம் கடந்த 11ம் தேதி நடந்துள்ளது. எனினும் ஏற்கனவே சீன விமானங்கள் பறந்தது, பாகிஸ்தான் படையினர் துப்பாக்கி தாக்குதல் என எல்லை பிரச்சனைகளால் மத்திய அரசு திண்டாடி வந்த நிலையில் இதை யாருக்கும் தெரியாமல் அப்படியே அமுக்கிவிட்டது.
தற்போது தான் இந்த விவகாரம் மெல்ல வெளிய கசிய துவங்கியுள்ளது. பாதுகாப்பு காரணத்துக்காக இதை வெளியில் தெரிவிக்கவில்லை என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அந்தமானி சிஐடி போலீஸ் எஸ்பி அசோக் சந்த் கூறுகையில்,
கடலில் மர்ம படகு ஒன்று இருப்பதாக தெரிசா தீவு மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். தற்போது அந்த படகு தெரிசா தீவு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
படகில் கிடைத்த குண்டுகளை அப்படியே பயன்படுத்திவிட முடியாது. அவற்றை ஏவுவதற்கு ராக்கெட் லாஞ்சர்கள் தேவை. ஆனால், அப்படி எதுவும் படகில் கிடைக்கவில்லை.
மேலும், இந்த படகில் ஏராளமான கடல்பாசிகள், கடல்பஞ்சுகள் ஒட்டியிருப்பதை பார்க்கும் போது இது பல மாதங்களாக இது இப்பகுதியில் சுற்றி வந்திருக்கலாம் என தெரிகிறது என்றார்.
இந்நிலையில் பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இந்த விவகாரம் குறித்து அந்தமான் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து அறிக்கை தயாரித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப இருக்கின்றனர். அந்த மர்ம படகு இந்தியாவில் தயாரிக்கப்பட்டது அல்ல என்றார்.
கவனிக்காமல் விட்டது எப்படி?...
இதையடுத்து போலீஸார் அந்த படகு எங்கிருந்து வந்தது. அது ஏன் பல மாதங்களாக அந்தமான் பகுதிக்குள் சுற்றியுள்ளது என விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் 5ம் தேதி பிடிபட்ட வட கொரிய கப்பலுக்கும் இதற்கும் எதாவது தொடர்பு உள்ளதா எனவும் துப்பு துலக்கி வருகின்றனர்.
இதையடுத்து கடல் எல்லைக்குள் ஒரு படகு பல மாதங்களாக சுற்றிய போது அதை கடற்படையும், பாதுகாப்பு படையினரும் அதை அறியாமல் இருந்தது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தீவிரவாதிகளா... கடத்தல்காரர்களா...
மேலும், படகு கண்டுபிடிக்கப்பட்ட தெரிசா தீவு மலாய்க்கா ஜலசந்திக்கு மிகவும் அருகில் உள்ளது. இந்த ஜலசந்தி ஆயுத கடத்தல், கடற் கொள்ளை, துப்பாக்கி் கொள்ளை உள்ளிட்ட மோசமான சம்பவங்களுக்கு பெயர்பெற்றதாகும்.
இதனால் கடத்தல்காரர்கள் யாரும் பயங்கர ஆயுதங்களை கடத்தியிருக்கலாம் அல்லது தீவிரவாதிகள் யாரும் ஊடுருவதற்கு படகை பயன்படுத்தியிருக்கலாம் போன்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளது. மேலும், அந்த படகில் நிறைய உணவுப்பொருட்கள் இருந்தற்கான அடையாளம் உள்ளது.