இனப்படுகொலையைக் கண்டித்து ஐ.நா. முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
ஐ.நா. சபையின் 64வது கூட்டத் தொடர் நேற்று மிக பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
கூட்டத் தொடருக்காக வந்திருக்கக் கூடிய தலைவர்களின் கவனத்தையும் பொதுச் சபையின் கவனத்தையும் கவரும் வகையில் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஐ.நா. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் குறித்து ஐ.நா.வின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சீன ஜனநாயகக் குழுக்கள், திபெத் விடுதலை அமைப்பு, காமரூன் குழு ஆகியவை தமது நாடுகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐ.நா. கட்டடத்தின் முதல் குடியிருப்பு (அவன்யூ) மற்றும் 47 ஆவது வீதிக்கு இடைப்பட்ட பகுதியில் தமிழர்கள் பலர், ஐ.நா.வின் செயலின்மைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் செயற்திறன் இன்மையை அவர்கள் கண்டித்து பேனர்கள், தட்டிகளை ஏந்தியிருந்தனர்.
கடந்த மே மாதத்தில் வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரின்போது இலங்கைப் படையினரின் கனரக ஆயுதப் பயன்பாட்டால் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த உயிரிழப்புக்களைத் தடுக்க பொதுச் செயலாளர் தவறிவிட்டார் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
அத்துடன், இலங்கைப் படையினரால் மேற்பார்வை செய்யப்படும் முகாம்களில் சுமார் 3 லட்சம் மக்கள் மிகச் சிறிதளவான நடமாட்டச் சுதந்திரத்துடன் தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் ஐ.நா. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பி இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை ஐ.நா. விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இலங்கையிலிருந்து தமிழ்ச் சமூகத்தை அடியோடு அழித்து விடுவதற்கு இலங்கை அரசு முயற்சிக்கிறது. ஆனால் இந்தக் குற்றச் செயல் ஐ.நா.வால் செயற்திறனுடன் தடுத்து நிறுத்தப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தெரிவித்தார்.
போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றபோதும், தனி நபர் விசாரணையாளர்களையும், சர்வதேச ஊடகங்களையும் போர்ப் பகுதிகளுக்குச் செல்ல அரசு அனுமதி மறுத்து வருகின்றது என மற்றொருவர் தெரிவித்தார்.