'ராகுல் புகழ்' கலாவதிக்கு திடீர் சுகவீனம்- மருத்துவமனையில் அனுமதி
மும்பை: ராகுல் காந்தியால் நாடு முழுவதும் பேசப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஏழை விதவைப் பெண்மணி கலாவதிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 13ம் தேதி நடைபெறவுள்ள மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் விதர்பா ஜனாந்தோலன் கட்சி சார்பில் கலாவதி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து கலாவதி போட்டியிடுவார் எனவும் அந்தக் கட்சி அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன், எனக்கு அரசியல் தெரியாது என்று கலாவதி கூறியிருந்தார். இந்த நிலையில், திடீரென கலாவதிக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து விதர்பா கட்சியின் தலைவர் கிஷோர் திவாரி கூறுகையில், நாங்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளோம். ஒருவேளை அவரால் போட்டியிட உடல் நலம் இடம் தராவிட்டால் வேறு வேட்பாளரை நிறுத்துவோம். இப்போதைக்கு கலாவதிதான் வேட்பாளர் என்றார்.
ஆனால் இன்றுதான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்த நிலையில் கலாவதி மருத்துவமனையில் போய்ச் சேர்ந்து விட்டதால் அவரால் மனு தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர் போட்டியிடுவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
48 வயதாகும் கலாவதிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அதனால் அவர் விதர்பாவில் உள்ள பந்தர்காவ்டா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.