காங். தலைவர்கள் படம், கட்சி கொடி எரிப்பு-பெண் கைது
திருச்சி: திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத ஆத்திரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் படம் மற்றும் கட்சிக் கொடியை தீவைத்து கொளுத்திய பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாநகராட்சி மேயராக இருந்த சாருபாலா தொண்டைமான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் 44வது வார்டுக்கு வரும் 7ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கு காங்கிரஸ் சார்பில் 6 பேர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் ஹேமா என்பவருக்கு சீட் வழங்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த சாருபாலா தொண்டைமானின் ஆதரவாளரான கல்யாணி என்பவர், தன் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் படம் மற்றும் கட்சிக்கொடி, கட்சி கரையுடன் கூடிய சேலை ஆகியவற்றை தீ வைத்து கொளுத்தினார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காங்கிரஸ் கட்சி கொடி தலைவர்கள் படத்தை எரித்த பெண் நிர்வாகியை கைது செய்தனர்.