நிச்சயம் ராமர் கோவில் கட்டப்படும்-அத்வானி
அகமதாபாத்: அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவில் கட்டப்படும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
20 ஆண்டுகளுக்கு முன் சோம்நாத்தில் இருந்து தான் தனது ரத யாத்திரை தொடங்கினார் அத்வானி. அதை நினைவுகூறும் வகையில் கடந்த 19 ஆண்டுகளாக இந்த தினத்தில் (செப்டம்பர் 25) அவர் சோம்நாத் வந்து கொண்டுள்ளார் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இந்த தினத்தையொட்டி நேற்று தனது மகள் பிரதீபாவுடன் குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலுக்கு வந்த அத்வானி அங்கு நடந்த மகாபூஜையில் பங்கேற்றார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அயோத்தியில் ராமர் கோவில் முழுமையான அளவில் கட்டி முடிக்கப்பட்டால் நாட்டு மக்கள் மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவார்கள். அங்கு ராமர் கோவில் கட்டப்பட வேண்டும், நிச்சயம் கட்டப்படும். அந்தக் கோவில் கட்டப்படும் வரை நான் சோம்நாத் கோவிலுக்கு வந்து கொண்டிருப்பேன் என்றார்.
கடந்த 2005ம் ஆண்டு மே 31ம் தேதி பாகிஸ்தான் சென்ற அத்வானி அங்கு அளித்த பேட்டியில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் தான் தனது வாழ்விலேயே மிகவும் கவலை மிகுந்த நாளாகும் என்று கூறியது நினைவுகூறத்தக்கது.