சென்னையில் கடல் வழியே சந்தன மரம் கடத்தல்
சென்னை: சென்னை சாஸ்திரி நகர் அருகே கடல் வழியாக சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையில் ஓடும் அடையாறு நதி, சாஸ்திரி நகர் அருகே கடலில் கலக்கிறது. அடையாறு நதியின் கழிமுகத்துக்கும், கடற்கரைக்கும் இடையே சுமார் 1 கிமீ., பரப்புக்கு அடர்ந்த காடுகள் இருக்கிறது.
இங்கு சந்தனம் போன்ற அரிய வகை மரங்கள் அதிகமுள்ளன. இதையடுத்து இந்த மரங்களை பாதுகாக்கும் வகையிலும், காட்டை பாதுகாக்கும் நோக்கத்திலும் காட்டை சுற்றிலும் சுற்று சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
ஆனால், இதையும் மீறி சமீபகாலமாக சில சமூக விரோதிகள் சந்தன மரங்களை வெட்டி கடத்தி வருவதாக தெரிகிறது. அவர்கள் சுவற்றை தாண்டி காட்டுக்குள் நுழைந்து இதை செய்து வருகின்றனர்.
மேலும், அவர்கள் மரத்தை கடல் வழியாக கடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் அந்த கடத்தல் கும்பலை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் யார், எங்கிருந்து வருகின்றனர்? சந்தன மரங்களை எங்கு கடத்தி செல்கின்றனர் போன்றவை குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.