சித்த, யுனானி, ஆயுர்வேத மருத்துவர் நல வாரியம் செயல் இழப்பு- மருத்துவர் சங்க தலைவர் புகார்
மதுரையில், சித்த மருத்துவர்கள் சங்க மாநில பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்பு சித்த மருத்துவர் சங்க மாநில தலைவர் வி. காளிதாஸ் கூறுகையில்,
இந்திய மருத்துவ கழகம் 30,000 போலி டாக்டர்களில், சித்த மருத்துவர்களும் உள்ளதாக தெரிவித்துள்ளது. இயற்கை மூலிகையில் சிகிச்சை அளிக்கும் நாங்கள் போலி டாக்டர்கள் அல்ல.
டாக்டர்களிடம், உதவியாளராக இருந்தவர்களே ஆங்கில மருந்து பெயரை தெரிந்து வைத்து போலி டாக்டர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
பாரம்பரிய மருத்துவர்களை எந்த தொந்தரவும் செய்யக் கூடாதென 2006 ல் அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, நாட்டில் பொது மக்களை ஏமாற்றும் போலி டாக்டர்களை தமிழக அரசு தயவுதாட்சன்யம் இன்றி கைது செய்ய வேண்டும்.
சித்த, யுனானி, ஆயுர்வேத மருத்துவர்கள் நல வாரியம் செயல் இழந்துள்ளது. இது முறைப்படி செயல்பட அரசு உரிய நடவடிக்கை வேண்டும்.
சென்னை, பாளையங்கோட்டையில் அரசு மற்றும் ஆறு தனியார் கல்லூரிகளிலிருந்து ஆண்டிற்கு 300 சித்த மருத்துவ பட்டதாரிகள் வெளியேறுகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் 200 பட்டதாரிகளை நியமிக்க அக்டோபரில் நேர்முக தேர்வு நடக்க உள்ளது. காலியாக உள்ள சித்த மருத்துவர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றார்.