அணு ஆயுத சட்டம்-இந்தியாவை நெருக்கும் ஐ.நா, யுஎஸ்
இந்த இரு சட்டங்களிலும் கையெழுத்திடாத நாடுகள் அனைத்தும் உடனே அதில் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவின் தூண்டுதலால் தான் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பதும் இது இந்தியா, பாகிஸ்தானை குறி வைத்தே கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்புப் பிரதிநிதியான ஷியாம் சரண், அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் இந்தியா கையெழுத்திடாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். அணு ஆயுதங்களை ஆக்கப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றார்.
எஸ்.எம். கிருஷ்ணாவும் திட்டவட்டம்:
ஐ.நா. பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மன்மோக் சிங்குடன் நியூயார்க் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறுகையில், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது என்றார். இந்த விஷயத்தில் எதிர்காலத்தில் உரிய முடிவெடுக்கப்படும் என்றார்.
இந்தியாவை நெருக்கும் பான் கி மூன்..
முன்னதாக தீர்மானத்தின் மீது பேசிய ஐ.நா. பொதுச் செயாளர் பான் கி மூன், அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க இந்தத் தீர்மானம் வழிவகுக்கும். இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட வேண்டும். அப்போதுதான் பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலும்.
சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் ஏற்கும் வகையில் விதிமுறை வகுக்கப்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் அச்சுறுத்தல் விலகும் என்றார்.
இந்தியா விளக்கம்:
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியப் பிரதிநிதி ஹர்தீப் புரி ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
அணு ஆயுத பரவல் தடைச் சட்டம் பாரபட்சமானது. இதை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் மூலம் கொண்டு வருவதை ஏற்க முடியாது.
இதில் உள்ள விதிமுறைகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரானது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அணு ஆயுதங்கள் மிகவும் அவசியமானவை. சர்வதேச அளவில் பிற நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துக் கொண்டு இந்தியாவை மட்டும் கையெழுத்திட நிர்பந்திப்பதை ஏற்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
நாங்க ஏற்கனவே சொன்னோம்..இடதுசாரிகள்:
இந் நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சீதாராம் யெச்சூரி,
அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் இந்தியாவை கையெழுத்திடுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற நிர்பந்தங்கள் ஏற்படும் என்று முன்னரே எச்சரித்தோம். ஆனால் அதையெலாலம் அலட்சியப்படுத்திவிட்டுத் தான் அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் வெறும் வர்த்தக ரீதியிலான ஒப்பந்தமாக இருக்காது. எதிர்காலத்தில் வெளிநாடுகளின் நிர்பந்தத்துக்கு இந்தியா பணிய வேண்டியிருக்கும் என்று முன்பே சுட்டிக் காட்டினோம்.
இந்த ஒப்பந்தங்கள் எதிலும் இந்தியா கையெழுத்திடக்கூடாது. அவை அனைத்துமே பாரபட்சமானவை, அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் சாதகமானவை என்றார்.