பால்கோ நிறுவன புகைக் கூண்டு நொறுங்கி 50 பேர் பலி - சீன என்ஜீனியர்கள் ஓட்டம்
டெல்லி: சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா என்ற இடத்தில் உள்ள பாரத் அலுமினியம் கம்பெனி (பால்கோ) நிறுவனத்தில் கட்டப்பட்டு வந்த பிரமாண்ட புகைக் கூண்டு நொறுங்கி விழுந்தது. இதில் சிக்கி 50 பேருக்கும் மேல் உயிரிழந்தனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 89 சீன என்ஜீனியர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளூர் மக்கள் தாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் தப்பி ஓடி விட்டனர்.
100 மீட்டர் உயரத்திலான அந்தப் புகைக் கூண்டு கட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை நொறுங்கி விழுந்தது. இதில் ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். இதுவரை 50 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சீனாவைச் சேர்ந்த என்ஜீனியர்கள், தொழிலாளர்கள் 89 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களைப் பிடிக்க அரசு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இவர்கள் அனைவரும் சீனாவின் ஷான்டாங் எலக்ட்ரிகல் மின் கழகத்தின் சார்பில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் ஆவர்.
600 மெகாவாட் திறனுடைய இரு மின் உலைகளை நிர்மானிக்கும் கான்டிராக்டை இந்த நிறுவனத்திடம் பால்கோ கொடுத்திருந்தது.
தப்பி ஓடியவர்களில் ஐந்து சீனப் பொறியாளர்கள், ராய்ப்பூர் விமான நிலையத்தில் வைத்து போலீஸாரால் பிடிக்கப்பட்டனர். அவர்கள் கொல்கத்தாவுக்கு செல்ல முயன்றபோது பிடிபட்டனர்.
மேலும் பலர் பிலாஸ்பூர் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.