வைரஸ் தாக்குதல்-அழியும் அபாயத்தில் பழனி பழங்கள்
பழனி: பழநி கோவில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படும் விருபக்ஷா மற்றும் சிறுமலை வாழைப் பழங்கள் வைரஸ் தாக்குதல் காரணமாக முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு வகை வாழைப் பழங்களும் பழனி மலை பகுதியில் மட்டும் விளைவிக்கின்றன. இதையடுத்து இந்த ஆண்டு மே மாதம் இந்த பழங்களுக்கு இப்பகுதியின் பழங்களாக புவியியல் ரீதியான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பழனி மலை பகுதியில் சுமார் 280 விவசாயிகளை உறுப்பினராக கொண்ட தமிழ்நாடு வாழைப் பழ விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் அரசு கூறுகையில்,
விவசாயிகள் மரங்கள் இருக்கும் பகுதியில் கலர் கலரான தாள்களை ஒட்டியுள்ளனர். இந்த தாள்கள் அபிட்ஸ் எனப்படும் ஒரு வகை வெள்ளை ஈக்கள் அதிகம் ஈர்க்கிறது. அந்த ஈக்கள் மூலம் தான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது என்றார்.
இவை பழனி மலை பகுதிகளில் இருக்கும் சுமார் 8 ஆயிரம் ஹெக்டேர் காபி தோட்டத்தில் ஊடு பயிராக நடப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பாக இது 40 ஆயிரம் ஹெக்டேராக இருந்தது. தற்போது 5ல் ஒரு பங்காக குறைந்துவிட்டது.
தற்போது வைரஸ் தாக்குதல் காரணமாக இதற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோய் காரணமாக வாழை மரத்தின் இலைகள் விரைவில் காய்ந்துவிடுவதால், காய், பழங்களாவதில்லை என கூறப்படுகிறது.
இதில் விருபக்ஷா பழம், தித்திப்பானதும், அதிக நீளம் வளரக் கூடியதாகும். இது தான் பஞ்சாமிர்தம் தயாரிக்க அதிம் பயன்படுத்தப்படுகிறது. பழனி கோவில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தின் தனி சுவையில் இந்த பழத்துக்கு கணிசமான பங்கு உண்டு.
இது குறித்து சங்கர் நாகராஜன் என்ற காபி பயிரிடுபவர் கூறுகையில்,
தற்போது ஊடுபயிராக வாழைப் பழம் பயிரிடப்படுவது வெகுவாக குறைந்து வருகிறது. இதற்கு நோய் பாதிப்பு தான் காரணம். இதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்றால் நோய் பரவியிருக்கும் அனைத்தும் மரங்களும் வேரொடு பிடுங்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இந்த பழங்கள் வாரத்துக்கு சுமார் 40 முதல் 50 கிலோ பழங்கள் கிடைத்து வந்தது. ஆனால், தற்போது அது சுத்தமாக இல்லை.
இதையடுத்து பழனி கோவில் நிர்வாகம் பிரசாதத்துக்காக வேறு இடங்களில் பழங்களை பெற முயற்சித்து வருகிறது. ஆனால், 10 பழம் ரூ. 27 வரை விற்கப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் இருக்கும் மைசூர் மலை பகுதியில் வாழைப் பழங்கள் கிடைக்குமா என அவர்கள் விசாரித்து வருகின்றனர். தற்போது நோய் குறித்து விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக காபி பயிர்கள் பாதிக்கப்படவில்லை என்றார்.
இது குறித்து தமிழக விவசாய பல்கலைகழகத்தின் தோட்டக் கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆனந்தன் கூறுகையில்,
இப்பகுதியில் 35 சதவீத பயிர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நோய் இல்லாத பழங்கள் ஒவ்வொன்றும் ரூ. 12 முதல் 14 வரை விலை போகின்றன என்றார்.
இந்த வகை பழங்கள் வேறு எந்த பகுதியில் விளைவிக்கப் படாததால் தற்போது நோயின் தாக்குதலால் இந்த வகை பழம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.