தமிழர் முகாமில் துப்பாக்கிச் சூடு-5 பேர் காயம்
கொழும்பு: வவுனியாவில் உள்ள தமிழர்களுக்கான முகாமில் இலங்கை ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள், பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.
சமையலுக்கு விறகு சேகரிப்பதற்காக முகாமிலிருந்து வெளியே சென்றவர்கள் மீது ராணுவத்தினர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.
செப்டம்பர் 17ம் தேதி முதல் முகாம்களில் உள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதை இலங்கை அரசு நிறுத்திவிட்டது.
உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்படும் அரிசி, பருப்பை தமிழர்களே சமைத்து உண்டு வருகின்றனர்.
ஆனால், இதற்கான எரிபொருள் இல்லை. இதனால் சமைப்பதற்காக விறகுகளை பொறுக்க அவர்கள் ஒரு முகாமைவிட்டு இன்னொரு முகாமுக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் துப்பாக்கிச் சூடு குறித்து இலங்கை ராணுவம் வழக்கம்போல் புதிய கதை விட்டுள்ளது. ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்ல முயன்றவர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்தபோது முகாமிலிருந்தவர்கள் கற்களை வீசித் தாக்கியதாகவும், அதைத் தொடர்ந்தே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
மேலும் இதுதொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ராணுவம் கூறுகிறது.