நிலத் தகராறு-அதிமுக பிரமுகர் படுகொலை
சென்னை: ஆக்கிரமிக்கட்ட நிலத்தை விற்றது தொடர்பாக ஏற்பட்ட பணத் தகராறில் அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்டார்.
சென்னை மாதவரம் கண்ணபிரான் கோவில் தெருவை சேர்ந்த வீரமணி (56) மாதவரம் நகரசபை அதிமுக முன்னாள் தலைவராகவும், அதிமுக நகர பொருளாளராகவும் இருந்தவர்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் தனது மனைவி ரமணியுடன் நேற்று காலை பைக்கில் சென்றார்.
மாதவரம் நெடுஞ்சாலையில் தனது நண்பரை பார்க்க பைக்கை அவர் நிறுத்தியபோது இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வீரமணியை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் வீரமணிக்கு தலை, கைகளில் வெட்டு விழுந்தது.
மனைவியின் கண் முன்னே வெட்டப்பட்ட வீரமணி சரிந்து விழுந்தார். தாக்குதல் நடத்திய கும்பல் தப்பியோடிவிட்டது.
வீரமணியை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் ரமணி. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை குறித்து மாதவரம் துணை கமிஷனர் சமுத்திரபாண்டி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதில் நிலத்தகராறில் வீரமணி கொல்லப்பட்டதாக தெரியவந்தது. லோகநாதன், பிரபு, வசந்த் ஆகியோர் தான் இந்தக் கொலையை செய்ததும் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாகிவிட்ட 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மாதவரம் அம்பேத்கார் நகர் அருகே சுமார் 20 ஏக்கர் நிலத்தை வீரமணியும் அவரது ஆட்களும் ஆக்கிரமித்து, பின்னர் அந்த இடத்தை ஒருவருக்கு பல கோடி ரூபாய்க்கு விற்றுள்ளனர்.
இதில் பங்கு கேட்டு லோகநாதன், பிரபு, வசந்த் ஆகிய மூவரும் வீரமணியுடன் நெடு நாட்களாகவே மோதலில் ஈடுபட்டு வந்தனர். அவர் பங்கு தர மறுக்கவே இந்தக் கொலை நடந்துள்ளதாகத் தெரிகிறது.