தொடரும் ஸ்டிரைக்: 46 விமானங்கள் ரத்து- சேவையை நிறுத்த ஏர் இந்தியா திட்டம்?
ஆனால் அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என்று ஏர் இந்தியா நிர்வாகம் மறுத்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் பைலட்டுகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏர் இந்தியா விமானங்கள் பல தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் மீண்டும் தோல்வி ஏற்பட்டதால் தற்காலிகமாக 15 நாட்களுக்கு விமான சேவையை நிறுத்தலாமா என்ற யோசனையில் ஏர் இந்தியா நிர்வாகம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அப்படிப்பட்ட யோசனை எதுவும் இல்லை என்று ஏர் இந்தியா நிர்வாகம் மறுத்துள்ளது.
இதற்கிடையே, புதிய டிக்கெட் முன்பதிவு எதையும் ஏர் இந்தியாவின் டெல்லி , மும்பை அலுவலகங்கள் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் விமான நிறுவனத்தின் இணையதளத்தில், முன்பதிவு செய்யும் பகுதிக்குச் சென்றால் சீட் காலியில்லை என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் தினசரி 310 விமான சேவைகளை (உள்ளூர் - 220, வெளிநாடு -90) இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
46 விமானங்கள் ரத்து..
இந்த நிலையில் இன்று மட்டும் 46 விமானங்களை ரத்து செய்துள்ளது ஏர் இந்தியா. இவற்றில் 37 வி்மானங்கள் உள்ளூர் சேவையாகும். மற்றவை வெளிநாட்டு விமான சேவையாகும்.
டெல்லியில் 16, மும்பையில் 6, சென்னையில் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை பைலட்டுகளும் ஸ்டிரைக்கில்...
இதற்கிடையே, ஸ்டிரைக்கில் ஈடுபட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை பைலட்டுகளில் ஒரு பிரிவினர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முதல் சென்னை பைலட்டுகள் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று சென்னையிலிருந்து கிளம்ப வேண்டிய ஐந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் சென்னை பைலட்டுகளில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் மீண்டும் பங்கேற்றிருப்பதாக தெரிகிறது.
ஏர் இந்தியா குழப்பம் காரணமாக விமான சேவை குறித்த தகவல்களை பயணிகள் தெரிந்து கொள்வதற்காக 1800-1801-707 என்ற கட்டணமில்லாத தொலைபேசி சேவை எண்ணை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.