நதி நீர் இணைப்பு கோரி தஞ்சையில் பாஜக இன்று ஆர்ப்பாட்டம்
சென்னை: நதிகளை இணைக்கக் கோரி பாஜக சார்பில் தஞ்சையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நதிநீர் இணைப்பு குறித்து பல ஆண்டு காலமாக பலர் பேசி வந்தாலும் அதற்குரிய சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய குழு அமைத்தவர் பிரதமராக இருந்த வாஜ்பாய்.
சுரேஷ் பிரபு தலைமையில் அமைத்த அந்த குழு கங்கை - காவிரி இணைப்பில் உள்ள கஷ்டங்களை விளக்கி தென்னக நதிகளை இணைக்க ஒரு திட்டமும், விந்தியத்துக்கு வடக்கே உள்ள நதிகளை இணைக்க ஒரு திட்டமும் தந்தார்.
தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று நதிகளை இணைக்க அடிக்கல் நாட்டுவேன் என்று அறிவித்தார் வாஜ்பாய். ஆனால் ஆட்சி மாறியது, மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு 5 ஆண்டு காலம் அத்திட்டத்தை கிடப்பில் போட்டது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வும் இத்திட்டத்திற்காக அழுத்தம் கொடுக்கவில்லை.
வாஜ்பாய் மீண்டும் பிரதமராக வந்திருந்தால், எப்படி தங்க நாற்கர சாலைகள் நம் கண் எதிரே பயன் தந்து கொண்டிருக்கின்றனவோ அது போல, நதிநீர் இணைப்பும் நிறைவேறியிருக்கும்.
காங்கிரஸ் அரசு இத்திட்டத்தை தாமதப்படுத்துகிறது என்று கருதியவர்களுக்கு ராகுல் காந்தி பேசிய பேச்சு விழிப்புணர்வை தந்திருக்கிறது. அதாவது இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என பொய்யான காரணத்தை சொல்லி இத்திட்டத்தையே கிடப்பில் போட காங்கிரஸ் முடிவு செய்திருப்பது அம்பலமாகியிருக்கிறது.
இத்திட்டத்தால் அதிகம் பயன் பெறப்போவது தமிழகம்தான். மகாநதி, கிருஷ்ணா நதிவரை வந்த பிறகு அந்த கிருஷ்ணா நதிநீர் கர்நாடகம் வரை செல்லாமல் நேரிடையாக தமிழகத்தின் ஒகேனக்கல் பகுதிக்கு வந்து சேரும் வகையில் திட்டமிடப்பட்டது.
தமிழகத்திற்கு பயன் தரும் நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து ராகுல்காந்தி பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும் நதிநீர் இணைப்பை வலியுறுத்தியும் 29-9-2009 செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில் தஞ்சாவூர் ரெயில் நிலையம் அருகில் பாரதீய ஜனதா கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
எனது, தலைமையில் நடைபெற இருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
அது போலவே தமிழக அரசு, சட்டசபை மூலமாக நிறைவேற்றியிருக்கும் தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் எனும் சட்டத்தை பலத்த எதிர்ப்பின் காரணமாக தற்போது நிறுத்திவைத்துள்ளது.
வேளாண்மை துறையில் ஆலோசனைகள் சொல்வதோ அல்லது வேளாண்மை பணிகளை ஆற்றுவதோ அரசாங்கத்தின் விதிகளின்படி பதிவு செய்யப்பட்டவர்களே இவற்றை செய்ய வேண்டும், பதிவேட்டில் இடம் பெறாத எவரும் வேளாண்மை ஆலோசகராகவோ வேளாண்மை பணியாற்றுபவராகவோ செயல்படக்கூடாது எனும் ஆபத்தான ஷரத்துள்ள இச்சட்டம் திரும்பப்பெற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என்று கூறியுள்ளார் கணேசன்.