For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் பயன்படுத்த கிரையோஜனிக் என்ஜின் தயார்

By Staff
Google Oneindia Tamil News

Madhavan Nair
வள்ளியூர்: நெல்லையில் உள்ள இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் முற்றிலும் இந்திய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள கிரையோஜனிக் என்ஜின் டிசம்பரில் விண்ணில் செலுத்தப்பட உள்ள ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோவின் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டை செலுத்த பயன்படுத்தப்படும் கிரையோஜனிக் என்ஜின் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த என்ஜினை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய நிகழ்வு. முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் கிரையோஜனிக் இன்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினில் 12 டன் எடை கொண்ட எரிபொருள் நிரப்பப்படும்.

இந்த இன்ஜின் ராக்கெட்டை விண்ணி்ல் செலுத்தி செயற்கைக் கோளை அதன் சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்த 720 வினாடிகள் எடுத்து கொள்ளும்.

கிரையோஜனிக் என்ஜின் கடந்த ஆண்டுகளில் 25 முறைகளுக்கும் மேலாக சுமார் ஏழாயிரம் வினாடிகள் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக பிளைட் டெஸ்டும் செய்யப்பட்டு விட்டது. இந்த என்ஜின் இங்கிருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சில தொடர் சோதனைகளுக்கு பின் டிசம்பரில் விண்ணில் செலுத்தப்பட உள்ள ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் பயன்படுத்தப்படும்.

இதற்கு இன்னும் 90 நாட்கள் ஆகும். அடுத்த கட்டமாக 25 டன் எடை கொண்ட எரிபொருளுடன் இயங்கும் அதிக சக்தி வாய்ந்த கிரையோஜனிக் என்ஜின்கள் தயாரிப்பில் இஸ்ரோ ஈடுபடும்.

இந்தப் பணிகள் அடுத்த 6 மாதத்திற்குள் முடிவு பெற்று விடும் என எதிர்பார்க்கிறோம்.
வரும் 2013ல் சந்திராயன் 2 செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படும். அண்மையில் விண்ணில் செலுத்தப்பட்ட ஓசன்சாட் தற்போது புகைப்படங்களை எடுத்து அனுப்பத் தொடங்கிவிட்டது. இன்னும் இரண்டு தினங்களில் இது முழுமையாக செயல்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

அது என்ன கிரையோஜெனிக் என்ஜின்?:

கிரையோஜெனிக் என்ஜின் என்பது திரவ மைனஸ் −150 °C அளவுக்கு குளிரூட்டப்பட்ட ஹைட்ரஜனைக் கொண்டு இயங்கும் ராக்கெட் என்ஜினாகும். இதன் எரிதிறன் மிக மிக அதிகம்.

தொலைத் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை புவியிலிருந்து 36,000 கி.மீ. உயரத்தில் செலுத்த மிக அதிக சக்தி கொண்ட ராக்கெட்டுகள் தேவை.

அந்த வகையில் இந்தியா உருவாக்கியுள்ள ராக்கெட் தான் ஜி.எஸ்.எல்.வி. இதுவரை இந்த ராக்கெட்டுக்கான கிரையோனிக் என்ஜினை ரஷ்யா தான் நமக்குத் தந்து வந்தது. இப்போது இந்த வகை என்ஜினை இஸ்ரோவே தயாரித்துவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X