ஸ்டிரைக்கை திரும்பப் பெற்றனர் ஏர் இந்தியா பைலட்டுகள்
டெல்லி: ஐந்து நாளாக நடந்து வந்து ஸ்டிரைக்கை ஏர் இந்தியா நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் பைலட்டுகள் வாபஸ் பெற்றுள்ளனர்.
ஊதியத்துடன் கூடிய ஊக்கத் தொடர்பாக ஏற்கனவே இருந்து வரும் நடவடிக்கைகள் அப்படியே நீடிக்கும் என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாக பைலட்டுகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பைலட்டுகளின் பிரதிநிதியான கேப்டன் வி.கே.பல்லா கூறுகையில், சம்பளக் குறைப்பு செய்யமாட்டோம் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் பட்டேலிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது. அதைத் தொடர்ந்துதான் நாங்கள் மீண்டும் பணிக்குத் திரும்புகிறோம்.
இனி வேலைநிறுத்தத்துக்கு அவசியமில்லை. அனைத்து விமானிகளும் நாளைமுதல் வழக்கம் போல பணியில் ஈடுபடுவார்கள். இந்த இடையூறுக்காக பயணிகளிடம் நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். நானோ மற்ற விமானிகளோ இந்திய அரசுக்கும் மேலானவர்களாக எங்களை நினைக்கவில்லை. அடிப்படை உரிமையைக் கேட்டோம்... அவ்வளவுதான். அரசின் உறுதியை நம்புகிறோம்.
இந்த விவகாரத்தில் தலையிட்டு சுமூக நிலையை ஏற்படுத்த உதவிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றி கூறிக் கொள்கிறோம்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பைலட்டுகள் பணிக்குத் திரும்பும்படியும் கேட்டுக் கொள்கிறேன் என்றார் பல்லா.
கடந்த சனிக்கிழமை ஸ்ட்ரைக் தொடங்கியது. ஏர் இந்தியா நஷ்டத்தை ஈடுகட்டும் முயற்திகளில் ஒன்றாக மூத்த விமானிகளின் ஊக்க சம்பளத்தில் (productivity link incentives) 70 சதவிகிதம் வரை குறைக்கப் போவதாக நிர்வாகம் அறிவித்ததை எதிர்த்து 180 பைலட்டுகள் ஒட்டு மொத்த மருத்துவ விடுப்பு எனும் நூதன ஸ்ட்ரைக்கில் இறங்கினர்.
இதனால் தொடர்ந்து 4 தினங்களில் 100 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டது. இன்று காலை டிக்கெட் புக்கிங்கும் ரத்து செய்யப்பட்டது.
ஏற்கெனவே ரூ.7200 கேடி நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இந்த வேலை நிறுத்தம் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபுல் படேல் விட்ட எச்சரிக்கை...
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், பைலட்டுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அவர் கூறுகையில், தயவு செய்து பைலட்டுகள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். பணியில் சேருங்கள். அனைத்து விமானங்களும் புதன்கிழமையன்று முழுமையாக இயக்கப்பட வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது. இதை செய்ய பைலட்டுகள் தவறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.
இதற்கு முன்பாக பிரதமர் மன்மோகன் சிங்கையும் படேல் சந்தித்துப் பேசினார். அதேபோல அரவிந்த் ஜாதவ், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் எம்.எம். நம்பியார் ஆகியோரும் பிரதமரை சந்தித்தனர். அவர்களிடம், பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு பிரதமர் உத்தரவிட்டார்.
பல விமானங்கள் ரத்து...
நேற்று மட்டும் 34 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்திருந்தது. இவற்றில் 30 உள்நாட்டு விமானங்கள், மற்ற நான்கும் வெளிநாட்டுச் சேவையாகும்.
சென்னையிலிருந்து செல்ல வேண்டிய 14 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. ஏழு விமானங்கள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன.
கோலாலம்பூர், ஷார்ஜா, கொழும்பு, குவைத், சிங்கப்பூர், துபாய் மற்றும் ஏராளமான உள்ளூர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகளில் பலரை வேறு நிறுவனங்களின் விமானங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பலரது டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டன.