நம்பர் பிளேட்டில் வாசகம்-போலீஸ் எச்சரிக்கை
சென்னை: வாகனத்தின் நம்பர் பிளேட்டில் அந்த வாகனத்தின் எண் மட்டுமே இருக்க வேண்டும். வேறு எதுவும் இருக்க கூடாது என சென்னை புறநகர் போலீஸ் கமிஷ்னர் ஜாங்கிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்.
கார், வேன், மோட்டார் பைக் என அனைத்து வாகனங்களிலும் பதிவு எண்ணை தவிர்த்து வேறு பல வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன. சில வாகனங்களில் படம் ஒட்டப்பட்டுள்ளது.
சிலர் சிறிதும், பெரிதுமாக எழுதியுள்ளனர். இவை அனைத்தும் சட்டப்படி குற்றமாகும். நம்பர் பிளேட்டில் பதிவு எண் மட்டுமே இருக்க வேண்டும்.
வாகனத்தின் பதிவு எண்கள் தெளிவாக இருக்கும் வகையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். சில கார்களில் காரின் சின்னம் இடம்பெற்றுள்ளது. அது நீக்கப்பட வேண்டும்.
வாகன ஓட்டிகள் தங்களது நம்பர் பிளேட்டை 10 நாட்களுக்கு சரி செய்ய வேண்டும். இதை மீறி செயல்படுவோர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் வசூலிக்கப்படும் என்றார்.
லைசென்ஸ் இருக்கா, ஆர்சி புக் இருக்கா, 8 போட தெரியுமா என கேட்கும் போலீஸார்கள், தீபாவளி நேரத்தில் வெளியான இந்த அறிவிப்பால் உற்சாகம் அடைந்துள்ளனர்.