நாகர்கோவில் 5 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி
நாகர்கோவில்: நாகர்கோவில் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறிகளுடன் நேற்று 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தமிழகத்தி்ல சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்து நாகர்கோவிலில் தான் பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு இதுவரை சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் ஆசாரிபள்ளம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இங்கு சிகிச்சை பெற்று வந்த வத்சலகுமாரி என்ற பெண் கடந்த 22ம் தேதியும், நிஷா என்ற 8 மாத கர்ப்பிணி பெண் நேற்றும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.
இந்த அடுத்தடுத்த இரண்டு சம்பவங்கள் நாகர்கோவில் மக்களை பெரும் பீதிக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் இந்த நோய்க்கு பலியான வத்சலகுமாரியின் கணவர் மனோகரன், மகன்கள் மனோஜ், கிருஷ்ணபிரசாத் ஆகியோரும் பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் ராமன்புதூரை சேர்ந்த வில்லியம் என்பவரது மனைவி பெலிக்ஸ், வடசேரியை சேர்ந்த பிரான்சிஸ் ஆகியோரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெலிக்ஸ் லண்டனில் இருக்கும் தனது மகனை பார்த்து விட்டு சில நாட்களுக்கு முன் தான் ஊருக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடைய பலியான நிஷாவின் ஊரில் சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் 309 பேர் பலி...
நேற்று மட்டும் இந்தியாவில் இந்த காய்ச்சலுக்கு சுமார் 6 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் இரண்டு பேரும், டெல்லி, ஆந்திரா, கேரளா, ஹரியானாவில் தலா ஒருவர் பலியாகி வருகின்றனர்.
இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது.