For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்-கபில் சிபல் தொடங்கி வைத்தார்

By Staff
Google Oneindia Tamil News

Kapil Sibal
திருவாரூர்: தமிழகத்தின் முதல் மத்திய பல்கலைக்கழகம் என்ற பெருமை கொண்ட திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் இன்று நடந்த விழாவில் தொடங்கி வைத்தார்.

ரூ. 1000 கோடியில் அமையவுள்ள இந்தப் பல்கலைக்கழகத்தின் தொடக்க விழா திருவாரூரில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடந்தது.

திருவாரூர் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிட வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் விழா நடந்தது.

முற்பகல் 11 மணியளவில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கபில் சிபல் பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கூடுதல் கட்டிடத்தில் மத்திய பல்கலைக்கழகம் தற்காலிகமாக செயல்பட இருக்கிறது.

பல்கலைக்கழகத்திற்கான நிரந்தரக் கட்டடங்கள், திருவாரூர் வண்டாம்பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களான தியாகராஜபுரம், பெரும்புகலூர், நீலாத்தூர் ஆகிய கிராமங்களில் 516 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்த வருகின்றன.

ஆனால் இந்த ஆண்டே திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி விருப்பம் தெரிவித்ததையொட்டி, தற்காலிகமாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தை கடந்தமாதம் 7-ந் தேதி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி.சஞ்சயிடம் மாவட்ட நிர்வாகம் ஒப்படைத்தது. அதை தொடர்ந்து தொடக்க விழா பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. பேராசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

முதலில் நான்கு பாடப் பிரிவுகள்...

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கிலம் உள்பட 4 பாடப்பிரிவுகள் முதலில் தொடங்கப்பட உள்ளன.

மேலும், பிளஸ்-2 படித்த மாணவர்கள் இளநிலை, முதுநிலை ஆய்வு படிப்புகள் வரை தொடர்ச்சியாக பயிலும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி முறை கொண்டு வரப்படவுள்ளது.

திருவாரூரையும் சேர்த்து நாடு முழுவதும் புதிதாக 12 மத்திய பல்கலைக்கழங்களை மத்திய அரசு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை முதல்வர் கருணாநிதி ரயில் மூலம் தஞ்சாவூர் வந்து சேர்ந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து சங்கம் ஹோட்டலுக்கு முதல்வர் கருணாநிதி கிளம்பிச் சென்றார்.

இன்று மாலை, திருவாரூர் பஸ் நிலையம் அருகே மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியார் முழு உருவ வெண்கல சிலையையும் கருணாநிதி திறந்து வைத்து பேசுகிறார்.

அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறும் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா, திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் அமைய முயற்சி எடுத்த முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாராட்டு விழா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

கருணாநிதி இன்று இரவு திருவாரூர் அரசு பயணிகள் விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை காலை காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் திருக்குவளைக்கு சென்று அங்கு தான் பிறந்த இல்லத்தில் செயல்படும் நூலகத்தை பார்வையிடுகிறார்.

அதன் பின்னர் ரயில் மூலம் மீண்டும் சென்னை வந்த சேருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X