திரும்பிச் செல்ல விரும்பாத அகதிகள்!
சென்னை: இப்போதைய சூழலில் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றே தமிழகத்தில் உள்ள அகதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த விரிவான அறிக்கையொன்றினை உளவுத் துறையினர் அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள முகாம்களில் கியூ பிரிவு போலீசார் மற்றும் மாநில உளவு போலீசார் இலங்கைக்கு செல்ல விரும்பும் அகதிகள் விபரம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய விவரம் உள்ளிட்ட பல தகவல்கள் குறித்து கருத்து கேட்டுள்ளனர்.
இதற்கு அகதிகள் பதிலளிக்கையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் உள்ளார். தனது நம்பிக்கைக்குரிய 8 தளபதிகளின் பாதுகாப்பில் அவர் பத்திரமாக உள்ளார். பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசு நாடகம் ஆடுகிறது. பொட்டு அம்மான் விஷயத்தில் இலங்கை பொய் சொல்வது அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது.
பிரபாகரன் விரைவில் இலங்கையில் தோன்றுவார்...", என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அகதிகளில் ஒருவர் கூட பிரபாகரன் இறந்துவிட்டதாக ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்போதைய சூழலில் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றே பெரும்பாலான தமிழர்கள் கருத்து கூறியுள்ளனர்.
இவர்களின் கருத்து அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.