பார்தி-எம்டிஎன் பேச்சு இரண்டாவது முறையாக முறிவு
டெல்லி: இந்தியாவின் தனியார் தொலைபேசி நிறுவனமான பார்தி ஏர்டெல் - தென்னாப்பிரிக்காவின் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான எம்டிஎன் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் முறிந்தது.
எதிர்பார்த்த மாதிரி இணக்கமான, ஒருமனதுடன் கூடிய ஒப்பந்தத்தை எட்ட முடியாததால் இரு நிறுவனங்களும் உடனடியாக பேச்சுவார்த்தையை கைவிடுவதென முடிவு செய்து அறிவித்துள்ளன.
மீண்டும் வருகிற மே மாதம் புதிதாக பேச்சுவார்த்தைகளைத் துவங்கப்போவதாக அறிவித்துள்ளன.
முழுமையான இணைப்பு குறித்ததாக இந்தப் புதிய பேச்சுக்கள் அமையும் என பார்தி - எம்டிஎன் நிறுவனங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை, இந்த பேச்சு முறிவு பெரிய ஏமாற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால் இதற்கு முழுக் காரணமும் அந்நாட்டு அரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இணைப்புக்குப் பிறகும் இரு நிறுவனங்களும் தொடர்ந்து இரு நாட்டு பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட வேண்டும் என தென்னாப்பிரிக்க அரசு விரும்புகிறது. ஆனால் இதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்க பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ள இந்த சூழலில், பார்தியிடமிருந்து கைமாறவிருந்த முதலீடு, பெரிய அளவிலான வெளிநாட்டு மூலதன வரவாகக் கருதப்பட்டது. இப்போது ஒப்பந்தம் ரத்தானதால், அந்த முதலீடு முற்றிலுமாக நின்றுபோயுள்ளது.