முன்னாள் காங். எம்.பி இந்தியர் அல்ல: நேபாள கொலை குற்றவாளி-சிபிஐ
டெல்லி: அசாம் மாநிலம் தேஷ்பூர் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் மூன்று முறை தேர்வு செய்யப்பட்ட மாணிக் குமார் சுப்பா இந்தியர் அல்ல என்றும், அவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நேபாளத்தில் இருந்து தப்பிவந்த குற்றவாளி என்றும் சிபிஐ உறுதி செய்துள்ளது. இது குறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
அசாம் லாட்டரி அதிபரான மாணிக் குமார் சுப்பா, காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டவர்.
நேபாளத்தில் பிறந்த இவர் போலி ஆவணங்களை தயாரித்து இந்தியர் என போட்டியிட்டதாக சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
விசாரணைக்கு பின் சிபிஐ, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில்,
அவர் நேபாளத்தை சேர்ந்தவர். ஆனால், இந்தியர் என்று போலி சான்றிதழ் கொடுத்துள்ளார். அவர் 12வது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது தான் அஸ்ஸாம் மாநிலத்தின் தேஷ்பூர் பகுதியில் மார்ச் 16, 1951ம் தேதி பிறந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், 14வது நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலம் தாப்கிராம் பகுதியில் மார்ச 16, 1958ம் ஆண்டு பிறந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது சொந்த பெயரான மொனி ராஜ் லிம்போ என்பதை மாற்றி மாணிக் குமார் சுப்பா என போலியான பெயருடன் உலா வந்துள்ளார்.
நேபாள அரசிடம் விசாரித்த போது ஒரு கொலை குற்றத்துக்காக 1973ம் ஆண்டு வரை சிறையில் இருந்தார் என்றும் அதன் பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் 1973க்கு முன் அவர் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
அவர் மீது 420 மோசடி செய்தது, 468 பித்தலாட்டம், 471 போலி ஆவணம் தயாரித்தல், 193 நீதிமன்றம் முன்பு போலி ஆவணம் அளித்தல் ஆகிய இபிகோ பரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கேஜி பாலாகிருஷ்ணன், பி.சதாசிவம், பிஎஸ் சௌகான் ஆகியோர் அளித்த தீர்ப்பில்,
அவர் மீது எப்ஐஆர் பதிய சிபிஐக்கு நாங்கள் வழிகாட்ட முடியாது. அறிக்கையை அடிப்படையாக வைத்து அவர்களே எப்ஐஆர் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அறிக்கை அவருக்கு எதிராக உள்ளது என்றனர்.