ரூ. 7 லட்சம் செக் மோசடி-நாகர்கோவில் கல்லூரி தலைவருக்கு பிடிவாரண்ட்
நாகர்கோவில்: ரூ. 7 லட்சத்துக்கு காசோலை கொடுத்து மோசடி செய்த வழக்கில் நாகர்கோவில் பொறியியல் கல்லூரி தலைவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் வழங்கியுள்ளது.
வள்ளியூரை சேர்ந்தவர் ஜேசுராஜா. இவர் வள்ளியூரில் எலக்டிரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நாகர்கோவில் செண்பகராமன்புதூரை சேர்ந்த தனியார் என்ஜினியரிங் கல்லூரியின் தலைவர் திருக்கடல் உதயம் என்பவர் பொருட்கள் வாங்கினார்.
இதற்காக அவர் கடை உரிமையாளரிடம் ரூ. 7 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். அந்த காசோலையை ஜேசுராஜா வங்கியில் கொடுத்தபோது பணம் இல்லை என திரும்பி வந்தது.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த ஜேசுராஜா, வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் திருக்கடல் உதயம் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வடிவேல் செக் மோசடி செய்த இன்ஜினியரிங் கல்லூரி தலைவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
வள்ளியூர் போலீஸார் கல்லூரி தலைவர் திருக்கடல் உதயத்தை தேடி வருகின்றனர்.