கண்ணிவெடி அகற்றம் - இலங்கைக்கு ஐ.நா. தரும் ரூ. 25 கோடி
இலங்கையில் முள்வேலி முகாம்களில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தினமும் தவித்து வருகின்றனர். அவர்கள் விரைவில் தங்களது சொந்த வீடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இலங்கை அரசு வடக்கு பகுதியில் கண்ணி வெடிகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை என கூறி இழுத்தடித்து வருகிறது. மேலும், முகாம்களில் இருந்த தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி, மனித உரிமைகளை மதிக்க தவறியது.
இந்நிலையில் இலங்கையின் மனித உரிமை துறை அமைச்சர் மஹிந்தா சமரசிங்கே, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடந்த ஐநா அகதிகள் ஆணையத்தின் 60வது செயற் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கேட்டு கொண்டதை அடுத்து, விரைவில் கண்ணிவெடிகளை அகற்றிவிட்டு தமிழர்களை குடியமர்த்தும் நோக்கில் இலங்கைக்கு ரூ. 25 கோடி நிதி உதவியை ஐநா அகதிகள் ஆணையம் வழங்கியுள்ளது.
கடந்த ஜனவரியில் துவக்கப்பட்ட இந்த கண்ணிவெடி சீரமைப்பு பணிகளை இலங்கை அரசு மந்த கதியில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
துவக்கத்தில் எடுக்கப்பட்ட சர்வேப்படி சுமார் 402 சதுர கிமீ பகுதிக்குள் 15 லட்சம் கண்ணி வெடிகள் இருப்பதாக கூறப்பட்டது. இதுவ ரை வவுனியா மாவட்டத்தில் 35 பிரிவுகளில் கண்ணிவெடிகள் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டதாகவும், மேலும் 10 பகுதிகளில் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முடிந்துவிட்டது. 19 பகுதிகளில் நடந்து வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.