கேட்பாரற்று கிடக்கும் பள்ளி நூலகங்கள்-பாஜக
சென்னை: தமிழக பள்ளிகளில் காலியாக இருக்கும் நூலகர் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மாணவர்களின் கல்வி தரம் மேம்பட நூலகங்கள் இன்றியமையாதவை. இதன் அடிப்படையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என பள்ளி கல்வி சட்டம் வலியுறுத்துகிறது.
ஒரு நூலகம் சிறப்பாக செயல்பட நல்ல இடம், நூல்கள், நூலகர் ஆகிய மூன்றும் அவசியம். ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிகளில் நூலகர்கள் இல்லாமல் நூலகங்கள் இயங்காமல் உள்ளன.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி கிராமப்புற மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் இதற்கெல்லாம் அடித்தளமாக திகழக்கூடிய பள்ளி நூலகங்கள் கேட்பாரற்று கிடப்பதை அவர் உணராதது ஏன்? என்பது தெரியவில்லை.
காலியாக இருக்கும் நூலகர் பணியிடங்களை சரியான நபர்களை கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும். பள்ளி நூலகங்கள் சிறப்பாக செயல்பட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.