தாய்-மகன் கொலை: தேடப்பட்ட வாலிபர் சரண்
சென்னை: சென்னையில் தாயும் மகனும் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தி்ல் சரணடைந்துள்ளார்.
சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனியை சேர்ந்த பெங்களூர் மருந்து நிறுவன அதிகாரி ராமசுப்பிரமணியன் மனைவி அனந்தலட்சுமி, மகன் சூரஜ் ஆகியோர் கத்திரி கோலால் குத்திக் கொலை செய்யப்பட்டனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு அனந்தலட்சுமியின் கணவரின் நண்பரான வேல்முருகன் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவர் கொலை நடந்த நாளான செப்டம்பர் 24ம் தேதி முதல் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அவரது காதலி தான்யாவை கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
வேல்முருகனைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந் நிலையில் வேல்முருகன், மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அங்கு கொடுத்துள்ள வாக்குமூலத்தில், அசோக்நகர் இரட்டை கொலைகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னை போலீசார் தேடி வருவதாக பத்திரிக்கைகள், டிவி மூலம் அறிந்தேன். எனவே சட்டப்படி அவர்களுக்கு ஒத்துழைக்க சரணைடைகிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து வேல்முருகனை 15 நாள் காவலில் வைத்த நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அசோக் நகர் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அசோக் நகர் இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான போலீசார் கோவை விரைந்துள்ளனர்.