அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வி?: அமைச்சர் மறுப்பு
சென்னை: அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும் என்று நான் சொன்னதாக சில தமிழ் நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. அது முற்றிலும் தவறானதும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் 2010-2011 கல்வியாண்டிலிருந்து முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் தமிழகத்தில் சமச்சீர் கல்வி தொடங்கப்படும்.
இதை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாடத் திட்டங்கள் வகுக்கும் பணியைப்பற்றி மட்டும் ஆய்வு செய்யப்பட்டது.
பாடத் திட்டம் தயாரிக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இன்று 5 அல்லது 6 நாட்களில் வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்துறையின் இணையத் தளத்தில் வெளியிடப்படும். வரைவு பாடத் திட்டத்தைப் பற்றிய கருத்துக்களும், ஆலோசனைகளும் வரவேற்கப்படும்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தைப் பற்றி ஒரு சில தமிழ் நாளேடுகள் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும் என்று நான் சொன்னதாக செய்தி வெளியிட்டுள்ளன.
அப்படி வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானதும், சமச்சீர் கல்வி தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுகளை திரித்துக் கூறுவதும் ஆகும்.
26-8-09 அன்று முதல்வர் கலைஞர் அறிவித்தபடி பயிற்று மொழியாக தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிறமொழிகளும் தொடர வேண்டும், தற்போது உள்ள அனைத்துக் கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து ஒரு பொது கல்வி வாரியத்தை உருவாக்க வேண்டும்,
வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் செயல்படுத்தப்படவுள்ள பொதுப் பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் தொடர்ந்து 2011-2012 ஆம் ஆண்டில் பிற வகுப்புகளுக்கும் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்ற முடிவுகளே சமச்சீர் கல்வியைப் பொறுத்தவரை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த முடிவுகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
எனவே அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக்கல்வி என்று வெளியிடப்பட்டுள்ள செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.