ரவுடி 'குரங்கு' செந்தில் எண்கெளண்டரில் சுட்டுக் கொலை
நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவன் குரங்கு செந்தில் (35).
சீர்காழியைச் சேர்ந்த இவன் பாலிடெக்னிக்கில் படித்தவன். போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி மணல்மேடு சங்கரின் கூட்டாளியான இவன் பல கொலை வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்தவன்.
2007ம் ஆண்டு திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைச்செல்வன் வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல சென்று திடீரென்று அவர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு வெட்டியும் கொலை செய்தான்.
தனது சகாவான மணல்மேடு சங்கர் போலீசாரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு பூண்டி கலைச்செல்வன் தான் காரணம் என்று கருதியதால் அவரை வெட்டிக் கொன்றதாகத் தெரிகிறது.
இதைத் தவிர குரங்கு செந்தில் மீது மேலும் 7 கொலை வழக்குகளும், கொள்ளை வழக்குகளும் உள்ளன.
இந் நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டத்திற்கு முதலவர் வந்தபோது, ஜாமீனில் வெளியில் இருந்த குரங்கு செந்தில் மூலம் ஏதாவது அசம்பாவிதம் நிகழக்கூடும் என்று கருதிய அம்மாபேட்டை போலீசார் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
செந்தில் திருச்சி துவாக்குடி பகுதியில் வழக்கறிஞர் ஒருவரின் வீட்டில் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், ஏட்டு ஸ்ரீதரன் ஆகியோர் தலைமையில் போலீசார் அதிகாலை 3.30 மணிக்கு அங்கு சென்றனர். போலீஸார் வருவதை பார்த்துவிட்ட குரங்கு செந்தில், மோட்டார் சைக்கிளில் தப்பினான்.
அவனிடம் நாட்டு துப்பாக்கி, வெடிகுண்டு, பட்டா கத்தி ஆகியவை இருந்தன. அவனை போலீசார் ஜீப்பில் துரத்திச் சென்று திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் அருகே மேம்பாலத்தில் வைத்து மடக்கினர்.
அப்போது குரங்கு செந்தில் இன்ஸ்பெக்டரையும், ஏட்டையும் அரிவாளால் வெட்டிவிட்டு வெடிகுண்டையும் வீசிவிட்டு தப்ப முயன்றான்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் குரங்கு செந்திலை சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவன் இறந்தான்.
அவனது உடலை போலீஸார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
பைக்கில் இருந்த நாட்டு துப்பாக்கி, வெடிகுண்டு, பட்டாக்கத்தி, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காயமடைந்த இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு உள்ளிட்ட 2 போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மண்டல போலீஸ் ஐஜி திரிபாதி, திருச்சி மாவட்ட எஸ்பி கலியமூர்த்தி, தஞ்சை மாவட்ட எஸ்பி செந்தில்வேலன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டதோடு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த காவலர்களை பார்த்து நலம் விசாரித்தனர்.
செந்திலுக்கு வலை ஏன்?:
அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஒரு வழக்கு விஷயமாக திருச்சி மத்திய சிறையில் உள்ள ஒரு கைதியை பார்க்க சென்றபோது, குரங்கு செந்திலும், அவனது கூட்டாளி கொற நடராஜனும் கொற கோபியும் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் அம்மாப்பேட்டை ஒன்றியச் செயலாளர் சுரேஷ் ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரியவந்தது.
இதையடுத்தே குரங்கு செந்திலை போலீசார் தேடிச் சென்றதாகத் தெரிகிறது.