மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு - பெண் துறவி பிரக்யாவுக்கு உடல் நலம் பாதிப்பு
நாசிக்: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நாசிக் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாசிக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரக்யா சிங். நேற்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால் உடல் நலக்குறைவால் அவர் ஆஜராகவில்லை. அவர் உள்ளிட்ட 11 பேரின் சிறைக் காவல் அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாசிக் சிவில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பிரக்யா சிங் தாக்கூர் அனுமதிக்கப்பட்டார். அவருடைய நிலை ஸ்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரக்யா சிங் தாக்கூர், மும்பையின் ஜேஜே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது நினைவிருக்கலாம்.