சென்னை அருகே பயங்கர தீ - 70 குடிசைகள் சாம்பல்
சென்னை: சென்னை அருகே மேடவாக்கம், பெல் நகர் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 70 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின.
மேடவாக்கம் பெல்நகர், அண்ணா மலைநகர் ஆகிய இடங்களில் ஏராளமான குடிசைகள் உள்ளன. நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் குடிசை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ மற்ற குடிசைகளுக்கும் வேகமாக பரவியது.
குடிசைகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார்கள். அப்போது 2 குடிசைகளில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து மேலும் பல குடிசைகளுக்கு தீ பரவியது.
மக்கள் தங்களது உடமைகளை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென்று பரவிவிட்டது.
தகவல் கிடைத்ததும் கோட்ட தீ அணைப்பு அதிகாரி பிரியா தலைமையில் தாம்பரம், கிண்டி, தேனாம்பேட்டை உள்பட 7 இடங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. 7 குடிநீர் வாரிய லாரிகளும் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சுமார் 75 குடிசைகள் இந்த தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தன.
பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இதில் எரிந்து சாம்பலாகி விட்டன. அனைத்துப் பொருட்களையும் இழந்த மக்கள் கதறி அழுதனர்.
பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.