கோவில் சொத்துக்களை சீரழிக்கும் அரசியல்வாதிகள் -ராம.கோபாலன்
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை...
கிறிஸ்தவர்கள் ஆலய சொத்தும், முஸ்லீம்கள் மசூதி சொத்தும் அவரவர் மதத்தைப் பாதுகாக்கவும், பரப்பவும் பயன்படுகிறது. ஆனால் இந்துக் கோவில்களின் சொத்து அரசின் உடும்புப்பிடியில் இருந்து வருகிறது. அது அரசியல்வாதிகளால் சீரழிக்கப்படுகிறது. மதச் சார்பற்ற அரசுக்கு இந்து மதத்தில் மட்டும் தலையிட என்ன உரிமை இருக்கிறது?
தமிழக அரசு தனது கட்சிக்காரர்களை அறங்காவலர்களாக நியமிக்கிறது. இவர்களில் பலர் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள், மற்றும் கிரிமினல் குற்றங்களுக்கு காரணமானவர்கள். இவர்களது செயலால் அரசியல்வாதிகள் வயிறு வளர்க்க கோவில் என்ன சத்திரமா? என்று பக்தர்கள் குமுறுகிறார்கள்.
கோவில்களுக்கு இலவச மின்சாரம்...
இலவச தொலைக்காட்சிப் பெட்டி, கேஸ் அடுப்பு என வழங்கும் தமிழக அரசு கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்காதது ஏன்? சமீபத்தில் முஸ்லீம் மசூதி சொத்துக்களைப் பராமரிக்கும் வக்பு வாரிய சொத்துகளை மீட்கத் துணை முதல்வர் ஸ்டாலின் அக்கறையோடு அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி ஆணையிடுகிறார்.
தமிழக முதல்வரோ, அறநிலையத்துறை அமைச்சரோ மற்ற துறை செயலர்களைக் கூட்டி கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பு மற்றும் முறைகேடுகள் செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீட்க முயற்சி செய்துள்ளனரா?
கட்டணம் வசூல் செய்ய தடை...
தமிழகத்தில் சுவாமி தரிசனத்திற்கு கட்டணம் வசூலிப்பது தடை செய்யப்பட வேண்டும். கேரள மாநிலத்தில் எந்தக் கோவிலிலும் தரிசன கட்டணம் வசூலிக்காமல் அனைவரும் தரிசிக்க முடிகிற போது ஏன் இங்கு நடைமுறைப்படுத்த முடியாது?
தனி வாரியம் தான் தீர்வு...
இதற்கு ஒரே தீர்வு, ஆலயம் மற்றும் ஆலயச் சொத்துக்களைப் பராமரிக்கும் பொறுப்பைத் தமிழக அரசு சுதந்திர வாரியத்திடம் ஒப்படைப்பது தான். இந்த சுதந்திர வாரியம் மூலம் ஆலயத்தை ஆன்மீக நோக்கோடு பராமரிக்கவும், ஊர்தோறும் பாழடைந்த ஆலயங்களைச் சீர்படுத்திடவும் முடியும்.
ஆலய வருமானம் முழுவதும் பக்தர்களின் வசதிக்காகவும் இந்து தர்மம் காத்திட, பரப்பிட, ஆன்மீகப் பணிக்கென செய்ய முடியும். இவையெல்லாம் நடக்கக்கூடிய காரியமா? என்று தோன்றலாம். முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை.
இந்துக்கள் சமய, சமுதாய விழிப்புணர்வு ஏற்பட்டு ஒற்றுமையோடு போராட முன்வந்தால் சில ஆண்டுகளிலேயே இது வெற்றி பெறும் என்பது நிச்சயம் என்றார்.