புதிய தலிபான் தலைவர் ஹக்கீமுல்லா மசூத்தும் பலி - அமெரிக்கா
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹக்கீமுல்லா மசூத்தும் பல வாரங்களுக்கு முன்பே சக தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலிபான் தலைவர் பைதுல்லா மசூத் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொல்லப்பட்டார். இதை முதலில் தலிபான்கள் மறுத்து வந்தனர். பின்னர் மசூத் கொல்லப்பட்டது உறுதியானது.
இதையடுத்து புதிய தலைவராக ஹக்கீமுல்லா மசூத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தற்போது அவரும் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க உளவுத் தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், பல வாரங்களுக்கு முன்பு தலிபான் தீவிரவாதிகளுக்குள் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் ஹக்கீமுல்லா மசூத் கொல்லப்பட்டுள்ளார். இது கிட்டத்தட்ட உறுதியானது.
இருப்பினும் இந்த செய்தியை தலிபான்கள் தரப்பில் உறுதி செய்யாமல் உள்ளனர். இந்த செய்தியை அவர்களாகவே உறுதிப்படுத்தினால்தான் உண்டு. இருப்பினும் ஹக்கீமுல்லா உயிரிழந்திருக்கிறார் என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம் என்றார்.
தெற்கு வசிரிஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சண்டையில்தான் ஹக்கீமுல்லா கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த அமெரிக்க ராக்கெட் வீச்சில் ஹக்கீமுல்லாவின் தம்பி கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.