68 பேரை பலி வாங்கிய தேக்கடி விபத்து- படகு டிரைவர் சஸ்பென்ட்
தேக்கடி: 68 உயிர்களை காவு கொண்ட தேக்கடி படகு விபத்தில், அந்தப் படகை செலுத்திய டிரைவரை கேரள மாநில சுற்றுலா துறை சஸ்பென்ட் செய்துள்ளது.
கேரளா மாநிலம் தேக்கடியில் சமீபத்தில் நடந்த படகு விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 18 பேர் உட்பட 68 பேர் பலியாயினர். 15 பேர் மட்டுமே உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தி்ன் போது படகை ஓட்டிய விக்டர் சாமுவேல் என்பவர் படகில் இருந்து குதித்து 200 மீ தூரம் நீந்தி வந்து உயிர் தப்பினார். தற்போது அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரிடமும் விசாரணை நடத்த கேரள மாநில டிஜிபி ஜேக்கப் புன்னுஸ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கேரள போலீஸார் தேனி வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரள சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் செரியன் பிலிப், படகு டிரைவர் சாமுவேலை சஸ்பென்ட் செய்திருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் மீது துறை வாரியான நடவடிக்கையும் எடுக்கப்பட இருக்கிறது.