மதுரையில் தேவர் சிலை அகற்றம் - வன்முறை, தடியடி
மதுரை: மதுரையில், அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் சிலையை போலீஸார் அகற்ற முயன்றதை எதிர்த்து சிலர் வன்முறையில் இறங்கினர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை, காமராசர் சாலையில், கொண்டித் தொழு சந்திப்பு என்ற இடத்தில் ஒரு தேவர் சிலை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு காவல்துறையின் அனுமதி பெறப்படவில்லை.
இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்து வந்த போலீஸார், தேவர் சிலையை அகற்ற முயன்றனர். இதையடுத்து அங்கு திரண்ட சிலர் சிலையை அகற்றக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர்.
மேலும் போலீஸார் மீது கல்வீச்சிலும் இறங்கினர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்து விரட்டினர்.
போலீஸ் தடியடியில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. கலைந்து சென்ற கும்பல் அந்தப் பகுதியில் தொடர்ந்து நின்றதார் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.