தேக்கடி விபத்து: படகோட்டி-உதவியாளர் கைது, படகு சவாரி ரத்து
தேக்கடி: தேக்கடியில் 68 பேர் உயிரிழக்கக் காரணமான படகை செலுத்திய டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரும் இன்று கைது செய்யப்பட்டனர்.
தேக்கடி ஏரியில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றதால், அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 45 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது உடல்களைத் தேடும் பணியை மீட்புப் படையினர் நிறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் விபத்தில் சிக்கி நீரில் நீந்தி கரை சேர்ந்து தப்பிய படகு டிரைவர் சாமுவேல் என்பவர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவரும், படகு உதவியாளர் அனீஷ் என்பவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேக்கடி விபத்து குறித்து நீதி விசாரணைக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படகு சவாரி தற்காலிகமாக ரத்து:
இதற்கிடயே தேக்கடியில் படகு சவாரியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய வனத்துறை, கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மத்திய வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுத்தை இன பாதுகாப்பு ஆணைய செயலர் ராஜேஷ் கோபாலன், மாநில வனத்துறைக்கு இந்த உத்தரவை அனுப்பியுள்ளார்.
படகு பயணங்களின் போது எடுக்க வேண்டிய பின்பற்ற வேண்டிய கடும் விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேக்கடியில் தற்போது படகில் பயணம் செய்பவர்களுக்கு ஆபத்து காலத்தில் உதவ ஜாக்கெட் மட்டுமே உள்ளது. ஆனால், விபத்து நடக்கும்போது பயணிகளுக்கு இது போதாது என்பது தற்போதைய விபத்து மூலம் தெரியவந்துள்ளது.
எனவே, படகு விபத்தோ அல்லது வேறு விபத்துகள் நேரிட்டாலும் அதில் இருந்து பயணிகளை எவ்வாறெல்லாம் காப்பாற்ற முடியுமோ அதற்கான உபகரணங்கள், வசதிகள் குறித்து மத்திய, மாநில அரசு அதிகாரிகள் விரைவில் சந்தித்து பேச உள்ளனர்.