மனைவியை கொன்று 'பொட்டு' தற்கொலை செய்து கொண்டாராம்-இலங்கை
இலங்கையில் கடந்த மே மாதம் 18ம் தேதி நடந்த இறுதி கட்ட போரில் அப்பாவி தமிழர்கள் சுமார் 20 ஆயிரம் பலியானார்கள். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை இறந்துவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்தது. மேலும், அவரது படத்தையும் வெளியிட்டது. இது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தன.
மேலும், அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே, உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், அவரது உடல் மற்றும் ஆதாரங்கள் இல்லாமல் போனதால் பொட்டுவின் நிலைமை தொடர்ந்து கேள்வி குறியாக இருந்தது.
இந்நிலையில் த நேசன் என்ற இலங்கை பத்திரிகை பொட்டு அம்மான் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை பொட்டு அம்மானின் உதவியாளர்களில் ஒருவராக இருந்த சசி மாஸ்டர் ராணுவத்திடம் கூறியிருப்பதாக தெரிகிறது.
அதில்,
பொட்டு அம்மான் தனது மனைவி, மகனுடன் போர்களத்தில் இருந்தார். மே 17ம் தேதி நடந்த தாக்குதலில் பொட்டு அம்மானின் மகன் பலியானான்.
இந்த சோகத்தால் அவரது மனைவி சயனைடு சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால், அவர் வைத்திருக்கும் சயனைடு சாப்பிட்டால் 30 நிமிடங்களுக்கு மேல் துடிதுடித்து சாக வேண்டியிருக்கும் என்பதால், பொட்டு அம்மான் அவரை தனது துப்பாக்கியால் சுட்டு கொன்று, மனைவிக்கு அமைதி தந்தார்.
பின்னர் போர்களத்துக்கு சென்ற அவர் விடுதலை புலிகள் படைதளபதிகள் சிலருக்கு முக்கிய உத்தரவு போட்டார். அப்போது இலங்கை ராணுவம் அவர்களது இருப்பிடத்துக்கு அருகில் வந்துவிட்டதால் அன்று இரவு தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை தொடர்ந்து உளவுத் துறையில் முக்கிய பதவியில் இருந்த ரத்னம் மாஸ்டர், துரோனர், கீர்த்தி, நிரோஷன், மணிமேகலை, அன்பு மாஸ்டர், ஞானவேல் மாஸ்டர், முத்தப்பன் ஆகியோரும் தற்கொலை செய்து கொண்டனர்.
உளவுத்துறை தகவல்களை ஒருங்கிணைக்கும் விநாயகம் மாஸ்டர் இந்தியாவுக்கு தப்பி சென்றுவிட்டார். தற்போது அவர் எங்கு பதுங்கியுள்ளார் என்பது தெரியவில்லை என்கிறது.