ஜெயங்கொண்டம்-வருவாய் அதிகாரி படுகொலை
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே வருவாய் ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
வீட்டிலிருந்த அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் சரமாரியாக வெட்டப்பட்டு படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜெயங்கொண்டம் கீழகுடியிருப்பு பகுதியில் வசித்து வந்த செல்வம் (36) பீப்பலூர் என்ற கிராமத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இன்று காலை இவரது வீட்டிற்கு பால் கொடுக்க வந்த பால்காரர் வீட்டின் கதவை தட்டியபோது யாரும் கதவைத் திறக்கவி்ல்லை. கதவு திறக்கப்பட்டு கிடந்ததால் அவர் உள்ளே சென்றார்.
அப்போது செல்வம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது மனைவி சுதாமதி ( 30), மகன் கௌதமன் (5), ஒன்றரை வயது மகள் திவ்யபாரதி ஆகியோர் பலத்த வெட்டுக் காயத்துடன் மயங்கிக் கிடந்தனர்.
இதைக் கண்டு அதிர்ந்த பால்காரர் அண்டை வீட்டினருக்கும் போலீசாருக்கும் தகவல் தந்தார்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து சுதாமதி, கௌதமன், திவ்யபாரதி மூவரையும் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கொலையான வருவாய் ஆய்வாளர் செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கொலையான செல்வம் பணியில் நேர்மையாக இருந்ததால் பலரின் வெறுப்புக்கும் ஆளாகியுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து விசாரணை நடக்கிறது.