எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக கூறி ரூ. 21 லட்சம் மோசடி
கருங்கல்: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ. 21 லட்சம் மோசடி செய்ததோடு, பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, மிரட்டியதாக 8 பேர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
கருங்கல் அருகேயுள்ள உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் தேவதாசன். இவர் தனது மகனை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டார். அதன்படி தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சீட்டுக்காக அலைந்தார்.
அப்போது மார்த்தாண்டம் அருகே உள்ள இடைக்கோடு பகுதியை சேர்ந்த ஞானதாஸ், கிறிஸ்டோபர், கிரிஸ்டல் ஜாய், தனசிங்தாஸ், கேரளாவை சேர்ந்த மனோகரன் ஆகியோர் அறிமுகமாயினர். அவர்கள் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறினார்.
அதற்கு ரூ.21 லட்சம் பணம் வேண்டும் என பேசி முடித்துள்ளனர். அதன்படி 21 லட்ச ரூபாயை 2 தவணையாக தேவதாசன் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி கொண்ட அவர்கள் கூறியது போல எம்பிபிஎஸ் சீட் வாங்கி தரவில்லை.
இதையடுத்து தேவதாசன் பணம் கொடுத்தவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் சரியாக பதில் கூறவில்லை. இதனால் தேவதாசன் தனது பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு அவர்கள் பணத்தை திருப்பி தர மறுத்துவிட்டனர். மேலும் அந்த எட்டு பேரும் தேவதாசை மிரட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தேவசாதன் எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாகவும், பணத்தை திருப்பி கேட்ட என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீஸார் தேடுவதை அறிந்ததும் எட்டு பேரும் தலைமறைவாகி விட்டனர்.